வவுனியா, குருமண்காட்டு சந்தி அருள்மிகு ஸ்ரீ காளி அம்மன் திருக்கோயில்

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, குருமண்காட்டு சந்தி அருள்மிகு ஸ்ரீ காளி அம்மன் திருக்கோயில்

அறம் காத்து மறமழிக்க அவதரிக்கும் தாயே
அல்லலுற்று அவதியுறும் எமைக் காக்க வரவேண்டும்
துன்பங்கள் போக்கிடுவாய் துயரங்கள் களைந்திடுவாய்
குருமண்காட்டிலுறை தாயே எங்கள் காளியம்மா

தீயவர்கள் தரும் கொடுமைகளைத் துடைத் தெறியும் தாயே
தெளிவான வழிகாட்டி எமைக் காக்க வரவேண்டும்
தெளிவான மனம் தருவாய் தொல்லைகள் போக்கிடுவாய்
குருமண்காட்டிலுறை தாயே எங்கள் காளியம்மா

ஆதரவு தந்தெம்மை அணைத்தருளும் தாயே
ஆபத்தில் இருந்தெம்மை காக்க வரவேண்டும்
அபாயங்கள் போக்கிடுவாய் ஆற்றலையும் தந்திடுவாய்
குருமண்காட்டிலுறை தாயே எங்கள் காளியம்மா

சூலத்தைத் தாங்கி நின்று சூதுகள் களையும் தாயே
சுதந்திரமாய் வாழ்வு தந்து எமைக்காக்க வரவேண்டும் சூதுகளைப் போக்கிடுவாய் சுதந்திரத்தைக் காத்திடுவாய்
குருமண்காட்டிலுறை தாயே எங்கள் காளியம்மா

அன்பு செய்து ஆற்றல் தந்து வாழவைக்கும் தாயே
அமைதி மனம் தந்தெம்மைக் காக்க வரவேண்டும்
அச்சம் போக்கிடுவாய் அரவணைத்து அருளிடுவாய்
குருமண்காட்டிலுறை தாயே எங்கள் காளியம்மா

வன்னித் தமிழ் மண்ணில் கோயில் கொண்ட தாயே
வளம் தந்து மதிதந்து எமைக்காக்க வரவேண்டும்
வாட்டம் போக்கிடுவாய் வளங்களும் தான் தருவாய்
குருமண்காட்டிலுறை தாயே எங்கள் காளியம்மா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *