மொனராகலை, கதிர்காமம் – அருள்மிகு கந்தப் பெருமான் திருக்கோயில்

ஊவா மாகாணம்- மொனராகலை மாவட்டம், கதிர்காமம்- அருள்மிகு கந்தப் பெருமான் திருக்கோயில்

அறம் காத்து மறமழிக்க அவதரிக்கும் அண்ணலே
அல்லலுற்று அவதியுறும் எமைக்காக்க வாருமைய்யா
கொடியபகை வஞ்சகங்கள் கூடி வந்து வாட்டுது
கொண்ட நலம் உரிமைகளும் எமை விட்டு நீங்குது

வினை தீர்க்கும் உன்னண்ணன் கோயில்களும் சிதையுது
பெற்ற அன்னை சக்தியவள் கருவறையும் கலங்குது
உன்னப்பன் இருப்பிடமும் வஞ்சகத்தால் அழியுது
இந்த நிலை என்றொழிந்து அமைதி வந்து சேருமோ

பாடுபட்டு உழைப்பவர்கள் விளைநிலங்கள் அழியுது
கால் நடைகள் பயிர் நிலமும் பாழ் பட்டுப் போகுது
நம் தமிழர் மொழியுரிமை தடைபட்டுப் போகுது
இதையெல்லாம் பார்த்து நீ இருப்பதுவும் நியாயமா?

கல்வி நிலை தடைப்பட்டு நிற்குது
நிம்மதியை தினம் நாடி ஓடும் நிலை நிலவுது
அச்சமிகு வாழ்வு உனது பரிசாகுமா
சொல்லிடுவாய் வேலவனே எங்களுக்கு

ஒன்றுபட்டு இந்நாட்டில் நிம்மதியாய் வாழும்வழி வேண்டும்
உழைப்பவர்கள் வாழ்வினிலே மேன்மையுற வேண்டும்
அச்சமில்லா எதிர்காலம் உறுதிபட வேண்டும்
ஆட்சி நிலை நல்லதாக அமையும் நிலை வேண்டும்

கதிர்காமத் திருத்தலத்தில் பெட்டகத்தில் மறைந்திருக்கும் முருகா
எங்கள் குறைகளைய எழுந்து நீ வெளியேவா ஐயா
துன்பங்கள் போக்கிவிடு துயரங்கள் தடுத்துவிடு
நிம்மதியாய் நாம் வாழ வழியையும் தவறாது தந்துவிடு.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *