யாழ். பொன்னாலை அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், பொன்னாலை அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்

பொன்னாலை கோயில் கொண்ட பெருமாளே
பொல்லாதார் தரும் துன்பம் போக்கிடவே வா
துன்பங்கள் பலகோடி துரத்தி வரும் வேளை
துணையாக இருந்தெம்மைக் காத்திடவே வா

காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் பெருமாளே
கவலையில்லா நிலை தந்து வாழவைக்க வா
கொடு பகைகள் நெருங்கிவரும் தீமை தரும் வேளை
துணையாக இருந்தெம்மைக் காத்திடவே வா

நீதி நெறி தவறாமல் உதவுகின்ற பெருமாளே
நித்தமும் உடனிருந்து வாழவைக்க வா
நொந்து மனம் வருந்துகின்ற வேளை
துணையாக இருந்தெம்மைக் காத்திடவே வா

வட இலங்கை கோயில் கொண்டு வளமளிக்கும் பெருமாளே
வற்றாத நலன்களைத் தந்தருள வா
வீண் துன்பம் எமை வாட்டும் வேளை
துணையாக இருந்தெம்மைக் காத்திடவே வா

அன்னை மகாலட்சுமியை அருகு கொண்ட பெருமாளே
அச்சமில்லா நிம்மதியைத் தந்திடவே வா
அச்சம் தரும் மன உளைச்சல் வாட்டுகின்ற வேளை
துணையாக இருந்தெம்மைக் காத்திடவே வா

பாற்கடலில் பள்ளி கொள்ளும் பாராளும் பெருமாளே
பாதகங்கள் அண்டா நிலை தந்தருள வா
புதிய வழி காட்டி வழிநடத்தும் வேளை
துணையாக இருந்தெம்மைக் காத்திடவே வா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *